நாமக்கல்: "கொல்லிமலையில், ஆகஸ்ட் 2, 3ம் தேதிகளில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட உள்ளது' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கொல்லிமலையில் வல்வில்ஓரி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து பேசியதாவது: இந்தாண்டு வல்வில் ஓரி விழா, ஆகஸ்ட் மாதம் 2, 3ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. விழாவுக்கு மக்கள் எளிதில் வரும் வகையில், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வில்வித்தை உட்பட மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வல்வில் ஓரியின் பெருமையை மாணவ, மாணவியர் அறியும் வகையில், கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தி, பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீஸ் நாய்களின் சாகஸ நிகழ்ச்சிகள், நாய்க் கண்காட்சி, வேளாண்துறை, வருவாய்துறை, சமூகநலத்துறை, வனத்துறை ஆகியவற்றின் பல்துறை பணிவிளக்க கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சீத்தாலட்சுமி உட்பட அனைத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
