மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் 0650-1
காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர் 0650-2
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற 0650-3
பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு 0650-4
2. இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில் 0651-1
நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் 0651-2
மத்த வெம் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி 0651-3
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் 0651-4
3. குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த 0652-1
வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப் 0652-2
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை 0652-3
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் 0652-4
4. வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும் 0653-1
புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி 0653-2
அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும் 0653-3
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் 0653-4
5. வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் 0654-1
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் 0654-2
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி 0654-3
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் 0654-4
6. ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்ட 0655-1
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி 0655-2
ஏறுடை வானம் தன்னில் இடிக் குரல் எழிலி யோடு 0655-3
மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும் 0655-4
7. மைச் செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால் 0656-1
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார் 0656-2
பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் 0656-3
நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் 0656-4
8. பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் 0657-1
குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான் 0657-2
வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான் 0657-3
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் 0657-4
9. அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள் 0658-1
இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவு கோத்துப் 0658-2
பெரும் புறம் அலையப் பூண்டான் பீலியும் குழையும் தட்டச் 0658-3
சுரும்புறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வான் 0658-4
10. பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனிப் புதல்வர் பேறே 0659-1
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே 0659-2
முருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று 0659-3
பரவுதல் செய்து நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார் 0659-4
1.1 வாரணச் சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத் 0660-1
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப் 0660-2
போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப் 0660-3
பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை 0660-4
12. பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு 0661-1
எயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன 0661-2
மயிலுடைக் கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மை 0661-3
அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே 0661-4
13. கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட 0662-1
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோடும் 0662-2
ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே 0662-3
பான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது 0662-4
14. கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும் 0663-1
பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி 0663-2
வரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் 0663-3
அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த 0663-4
15. அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம் 0664-1
பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலைக் 0664-2
கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை 0664-3
பொருவரைத் தோள்களாரப் புதல்வனை எடுத்துக் கொண்டான் 0664-4
16. கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும் 0665-1
இரும்புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி 0665-2
அரும் பெறல் உலகமெல்லாம் அளப்பரும் பெருமை காட்டித் 0665-3
தருங்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து தோன்ற 0665-4
17. அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும் 0666-1
திண்ணன் என்றியம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார் 0666-2
புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானைக் 0666-3
கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே 0666-4
18. வரையுறை கடவுட் காப்பு மறகுடி மரபில் தங்கள் 0667-1
புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்து 0667-2
விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த 0667-3
அரை மணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில் 0667-4
19. வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப் 0668-1
பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கெல்லாம் 0668-2
திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே 0668-3
அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார் 0668-4
20. ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப் 0669-1
பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி 0669-2
மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த 0669-3
நாண்டரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க 0669-4
21. பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்க 0670-1
காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித் 0670-2
தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன 0670-3
மாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில் 0670-4
22. தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து 0671-1
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில் 0671-2
உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ் சொல் 0671-3
வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார் 0671-4
23. பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொற்கை நீட்டப் 0672-1
பரிஉடைத் தந்தை கண்டு பைந்தழை கைக் கொண்டோச்ச 0672-2
இரு சுடர்க் குறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி 0672-3
வருதுளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி 0672-4
24. துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப் 0673-1
பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல் 0673-2
அடிச் சிறு தளிரால் சிந்தி அருகுறு சிறுவரோடும் 0673-3
குடிச் செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து 0673-4
25. அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் 0674-1
வனை தரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்த ரோடும் 0674-2
சினை மலர்க் காவுகள் ஆடி செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த 0674-3
புனை மருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி 0674-4
26. கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டி 0675-1
கொடு வரிக் குருளை செந்நாய் கொடுஞ் செவிச் சாபம் ஆன 0675-2
முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து 0675-3
இடு மரத் திரளில் கட்டி வளப்பன எண்ணிலாத 0675-4
27. அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக் 0676-1
குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல் 0676-2
புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச் 0676-3
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் 0676-4
28. தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால் 0677-1
சிந்தை உள் மகிழப் புல்லிச் சிலைத் தொழில் பயிற்ற வேண்டி 0677-2
முந்தை அத் துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி 0677-3
வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான் 0677-4
29. வேடர் தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற 0678-1
சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று 0678-2
ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு 0678-3
மாடுயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம் 0678-4
30. மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் 0679-1
கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும் 0679-2
தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச் 0679-3
சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார் 0679-4
31. மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர் 0680-1
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா எங்கும் 0680-2
பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்து 0680-3
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் 0680-4
32. பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த 0681-1
தேனலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேரு 0681-2
வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும் 0681-3
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் செய்தார் 0681-4
33. சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த 0682-1
நலமிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர் 0682-2
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி 0682-3
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் 0682-4
34. ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி 0683-1
மெய் வரைத் தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் 0683-2
கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச் 0683-3
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர் 0683-4
35. செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து 0684-1
வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார் 0684-2
நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு 0684-3
அந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள் 0684-4
36. அயல் வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார் 0685-1
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம் 0685-2
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்தி 0685-3
மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார் 0685-4
37. பாசிலைப் படலைச் சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக் 0686-1
காசுடை வடத் தோல் கட்டி கவடி மெய்க் கலன்கள் பூண்டார் 0686-2
மாசில் சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடி 0686-3
ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் சிலை மருங்கு சூழ்ந்தார் 0686-4
38. தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் 0687-1
எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் 0687-2
திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக் 0687-3
கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள் 0687-4
39. குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆட 0688-1
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட 0688-2
வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம் 0688-3
அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர் 0688-4
40. வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும் 0689-1
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத் 0689-2
தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால் 0689-3
பொங்கொளிக் கரும் போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள் 0689-4
41. பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன் முன் செய்த 0690-1
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும் 0690-2
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக் 0690-3
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம் 0690-4
42. வண்ணவெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்று 0691-1
கண்ணகல் சாயல் பொங்கக் கலை வளர் திங்களே போல் 0691-2
எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லாப் 0691-3
புண்ணியம் தோன்றி மேல் மேல் வளர் அதன் பொலிவு போல்வார் 0691-4
43. இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இருங் குறவர்
பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய 0692-1
மை வண்ண வரை நெடுந் தோள் நாகன் தானும் மலை எங்கும்
வனம் எங்கும் வரம்பில் காலம் 0692-2
கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கண நிரைகள்
பல கவர்ந்து கானம் காத்து 0692-3
மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் எய்தி வில்லுழவின்
பெரு முயற்சி மெலிவன் ஆனான் 0692-4
44. அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும் அடலேனம் புலி கரடி கடமை ஆமா 0693-1
வெங் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலைத் 0693-2
திங்கள் முறை வேட்டை வினை தாழ்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று 0693-3
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன் பால் சார்ந்து சொன்னார் 0693-4
45. சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி 0694-1
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயல கில்லேன் 0694-2
என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் கைக் கொண்மின் என்ற போதின் 0694-3
அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இம் மாற்றம் அரைகின்றார்கள் 0694-4
46. இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் 0695-1
அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி 0695-2
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம் படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை 0695-3
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் 0695-4
47. சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை முன் கொண்டுவரச் செப்பி விட்டு 0696-1
மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போகக் காடு பலி மகிழ்வு ஊட்ட 0696-2
தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று 0696-3
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் 0696-4
48. கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து 0697-1
மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு 0697-2
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் தாழைப்பீலி மரவுரி மேல் சார எய்திப் 0697-3
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர் வேடர் கோமானைப் போற்றி நின்றாள் 0697-4
49. நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி 0698-1
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல 0698-2
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம் 0698-3
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் 0698-4
50. கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள் குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு 0699-1
பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும் 0699-2
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலங் கவர் வென்றி மேவு மாறு 0699-3
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் 0699-4
51. மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி மனமகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு 0700-1
எற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரிச் 0700-2
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்திக் 0700-3
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள் 0700-4
52. தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள் 0701-1
மைவிரவு நறுங் குஞ்சி வாசக் கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்னக் 0701-2
கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் 0701-3
செய்வரை போல் புயம் இரண்டும் செறியப் புல்லிச் செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான் 0701-4
53. முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைந்தலினால் முன்புபோல 0702-1
என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய் 0702-2
மன்னு சிலை மலையர் குலக் காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டை ஆடி என்றும் 0702-3
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்றுடைய தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே 0702-4
54. தந்தை நிலை உள்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற 0703-1
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு 0703-2
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக் கொண்டு 0703-3
சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்குத் திருத் தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் 0703-4
55. நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து 0704-1
தெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய் 0704-2
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட 0704-3
இம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் எழுக என விடை கொடுத்தான் இயல்பில் நின்றான் 0704-4
56. செங்கண் வயக் கோளரியேறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற 0705-1
வெங்கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடை கொண்டு புறம் போந்து வேடரோடும் 0705-2
மங்கல நீர்ச் சுனை படிந்து மனையின் வைகி வைகிருளின் புலர் காலை வரிவிற் சாலைப் 0705-3
பொங்கு சிலை அடல் வேட்டைக் கோலம் கொள்ளப் புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் 0705-4
57. நெறி கொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க 0706-1
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய்யொளிப் பீலி சேர்த்தி 0706-2
வெறி கொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி 0706-3
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொளப் பின்பு செய்து 0706-4
58. முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி 0707-1
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறாரச் சாத்தி 0707-2
மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின் 0707-3
மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக 0707-4
59. கண்டத்திடை வெண் கவடிக் கதிர் மாலை சேர 0708-1
கொண்டக் கொடு பன் மணி கோத்திடை ஏனக் கோடு 0708-2
துண்டப் பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல் 0708-3
தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க 0708-4
60. மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலைத் தாழத் 0709-1
தாரிற் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்னச் 0709-2
சேர்விற் பொலி கங்கண மீது திகழ்த முன் கைக் 0709-3
கார்விற் செறி நாண் எறி கைச் செறி கட்டி கட்டி 0709-4
61. அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத்து 0710-1
திரையில் படு வெள்ளலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி 0710-2
நிரையில் பொலி நீளுடை தோல்கரி கைப்புறம் சூழ் 0710-3
விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி 0710-4
62. வீரக் கழல் காலின் விளங்க அணிந்து பாதம் 0711-1
சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப் 0711-2
பாரப் பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன் 0711-3
சாரத் திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி 0711-4
63. அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித் 0712-1
துங்கப் பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்ப 0712-2
வெங்கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்கச் 0712-3
செங்கைத் தலத்தால் தடவிச் சிறு நாண் எறிந்தார் 0712-4
64. பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி 0713-1
வில் வேடர் ஆயத் துடி மேவி ஒலிக்கு முன்றில் 0713-2
சொல் வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்ம 0713-3
வல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் 0713-4
65. மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில் 0714-1
பானற்குல மாமலரில் படர் சோதியார் முன் 0714-2
தேனற்றசை தேறல் சருப் பொரி மற்றும் உள்ள 0714-3
கானப் பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள் 0714-4
6.6 நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்கப் புக்குச் 0715-1
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி 0715-2
உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ள வல்ல 0715-3
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் 0715-4
67. அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னைச் 0716-1
செப்பற்கு அரிதாய சிறப்பு எதிர் செய்து போக்கிக் கைப் பற்றிய 0716-2
திண் சிலை கார் மழை மேகம் என்ன 0716-3
மெய்ப் பொற்புடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் 0716-4
68. தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர் 0717-1
வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார் 0717-2
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்ணிலார் 0717-3
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே 0717-4
69. வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே 0718-1
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன் 0718-2
சென்று நீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய் 0718-3
ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடெலாம் 0718-4
70. போர் வலைச் சிலைத் தொழில் புறத்திலே விளைப்பச் 0719-1
சார் வலைத் தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம் முன்னே 0719-2
கார் வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள் 0719-3
வார் வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் 0719-4
71. நண்ணி மா மறைக் குலங்கள் நாட என்று நீடும் அத் 0720-1
தண்ணிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமைக் 0720-2
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன் 0720-3
எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார் 0720-4
72. கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம் 0721-1
மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும் 0721-2
சேடு கொண்டகை விளிச் சிறந்த ஓசை செல்லவும் 0721-3
காடு கொண்டு எழுந்த வேடு கை வளைந்து சென்றதே 0721-4
73. நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு காடு கூட நேர் 0722-1
வருங்கருஞ் சிலைத் தடக்கை மான வேடர் சேனை தான் 0722-2
பொருந் தடந் திரைக்கடல் பரப்பு இடைப் புகும் பெருங் 0722-3
கருந்தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே 0722-4
74. தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம் 0723-1
பன்றி வெம் மரைக் கணங்கள் ஆதியான பல் குலம் 0723-2
துன்றி நின்ற என்றடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவே 0723-3
வன் தடக்கை வார்கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார் 0723-4
75. ஓடி எறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பு எலாம் 0724-1
நெடிய திண் வலைத் தொடக்கு நீளிடைப் பிணித்து நேர் 0724-2
கடி கொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்த பின் 0724-3
செடி தலைச் சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் 0724-4
76. வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன் 0725-1
மஞ்சலைக்கு மாமலை சரிப் புறத்து வந்த மா 0725-2
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள் 0725-3
செஞ்சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர் 0725-4
7.7 வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர் 0726-1
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் 0726-2
மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக் 0726-3
கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம் 0726-4
78. ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலைக் குலம் 0727-1
கான மேதி யானை வெம் புலிக் கணங்கள் கான் மரை 0727-2
ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன் 0727-3
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் 0727-4
79. தாளறுவன் இடை துணிவன தலை துமிவன கலைமா 0728-1
வாளிகளடு குடல் சொரிதர மறிவன சில மரை மா 0728-2
நீளுடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா 0728-3
மீளிகொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே 0728-4
80. வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய் 0729-1
செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா 0729-2
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனைப் 0729-3
பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள் 0729-4
81. பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் 0730-1
முன் நடுமுக மிசை உருவிட முடுகிய விசையுடன் அக் 0730-2
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத் 0730-3
தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள் 0730-4
82. கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் 0731-1
குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே 0731-2
பொரு கரி யொடு சின அரியிடை புரையறவுடல் புகலால் 0731-3
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே 0731-4
83. நீளிடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான் 0732-1
தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம் 0732-2
வாள் விடுகதிர் மதி பிரிவுற வருமென விழும் உழையைக் 0732-3
கோளடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே 0732-4
84. கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே 0733-1
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் 0733-2
அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால் 0733-3
மிடை கரு மரை கரடிகள் ஓடு விழுவன வன மேதி 0733-4
85. பல துறைகளின் வெருவரலொடு பயில் வலையற நுழை மா 0734-1
உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய் 0734-2
நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர் 0734-3
புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவுளவே 0734-4
86. துடியடியன மடி செவியன துறுகய முனி தொடரார் 0735-1
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார் 0735-2
அடி தளர்வுறு கரு உடையன அணை உறு பிணை அலையார் 0735-3
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் 0735-4
87. இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக் 0736-1
கைவரைகலும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம் 0736-2
பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி 0736-3
மொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில் 0736-4
88. போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு 0737-1
ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் 0737-2
தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல் 0737-3
ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் 0737-4
89. நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில் 0738-1
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில் 0738-2
கூடினர் விடு பகழிகளடு கொலை ஞமலிகள் வழுவி 0738-3
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல் 0738-4
90. குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இடக் குரல் நீள் 0739-1
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிதோடித் 0739-2
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல் 0739-3
சென்று அதனிடை நின்றது வலிது தெருமர நிரையில் 0739-4
91. அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன் 0740-1
கைத் தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி 0740-2
மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி 0740-3
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர் 0740-4
92. வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த 0741-1
மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன் 0741-2
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம் 0741-3
ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் 0741-4
93. மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற 0742-1
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச் 0742-2
சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து 0742-3
வெற்றி கொள் வேட்டைக் காடு குருகுவோம் மெல்ல என்றார் 0742-4
94. என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே 0743-1
நன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் 0743-2
நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட 0743-3
குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான் 0743-4
95. பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே 0744-1
இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும் 0744-2
அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார் 0744-3
செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை 0744-4
96. நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன் 0745-1
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச் 0745-2
சேணுயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே 0745-3
கோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான் 0745-4
97. ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம் 0746-1
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல் 0746-2
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும் 0746-3
தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம் 0746-4
98. உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து 0747-1
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் 0747-2
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும் 0747-3
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினைச் சார்ந்தார் 0747-4
99 ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு 0748-1
வாங்கு வில் காடன் தன்னை மரக் கடை தீக் கோல் பண்ணி 0748-2
ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டு 0748-3
நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார் 0748-4
100 அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் 0749-1
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம் 0749-2
களி வரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு 0749-3
குளிர் வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார் 0749-4
101 கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி 0750-1
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட 0750-2
இது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்து 0750-3
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான் 0750-4
102. முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன 0751-1
அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி 0751-2
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி 0751-3
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும் 0751-4
103. நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும் 0752-1
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி 0752-2
ஆணையாம் சிவத்தைச் சாரா அணைபவர் போல ஐயர் 0752-3
நீணிலை மலையை ஏறி நேர் படச் செல்லும் போதில் 0752-4
104. திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே 0753-1
அம் கண்ணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத் 0753-2
தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப் 0753-3
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார் 0753-4
105. மாகமார் திருக் காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள 0754-1
ஏக நாயகரைக் கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின் 0754-2
வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும் 0754-3
மோகமாய் ஓடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார் 0754-4
106. நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும் 0755-1
வடிவெலாம் புளகம் பொங்க மலர்க் கண்ணீர் அருவி பாய 0755-2
அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று 0755-3
படி இலாப் பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற 0755-4
107. வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல் 0756-1
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில் 0756-2
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன் 0756-3
இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் 0756-4
108. கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்தப் 0757-1
பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து 0757-2
மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற 0757-3
அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான் 0757-4
109. வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டிக் 0758-1
குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி 0758-2
ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி முன்பு அறைந்த தேர் பார்ப்பான் 0758-3
அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் 0758-4
110. உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில் 0759-1
திண்ணனார் திருக் காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை 0759-2
எண்ணிய இவைகொலாம் என்று இது கடைப் பிடித்துக் கொண்டு அவ் 0759-3
அண்ணலைப் பிரிய மாட்டா அளவில் ஆதரவு நீட 0759-4
111 இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே 0760-1
இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை 0760-2
இவர் தமைப் பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சால 0760-3
இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும் என்று 0760-4
112. போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீளப் போவர் 0761-1
காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆப் போல்வர் 0761-2
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே 0761-3
கோதறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் 0761-4
113. ஆர்தமராக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் 0762-1
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று 0762-2
சோர் தரு கண்ணீர் வாரப் போய் வரத் துணிந்தார் ஆகி 0762-3
வார் சிலை எடுத்துக் கொண்டு மலர்க் கையால் தொழுது போந்தார் 0762-4
114. முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன் 0763-1
பின்பு வந்து அணைய முன்னைப் பிற துறை வேட்கை நீங்கி 0763-2
அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் 0763-3
பொன் புனை கரையில் ஏறிப் புது மலர்க் காவில் புக்கார் 0763-4
115. காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன் 0764-1
கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் 0764-2
மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று 0764-3
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன் 0764-4
116. அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு 0765-1
வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு என்ன நீங்கான் 0765-2
இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான் 0765-3
நம்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான் 0765-4
117. என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள் 0766-1
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் 0766-2
வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க 0766-3
இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு 0766-4
118. கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ 0767-1
வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச் 0767-2
சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை 0767-3
ஏலவே கோலிக் கூட அதன் மிசை இடுவார் ஆனார் 0767-4
119. மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே 0768-1
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான் 0768-2
பெரும் பசி உடையன் ஏனும் பேச்சிலன் எமக்கும் பேறு 0768-3
தரும் பரிசு உணரான் மற்றைத் தசை புறத்து எறியா நின்றான் 0768-4
120. தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்று இதனைத் தீர்க்கல் 0769-1
ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு 0769-2
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டைக் கானில் 0769-3
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணிப் போனார் 0769-4
121 கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண் 0770-1
ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி 0770-2
மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்த 0770-3
தூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார் 0770-4
122 தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப் 0771-1
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி 0771-2
இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கி 0771-3
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம் 0771-4
123. இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி வெற்பின் 0772-1
முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில் 0772-2
வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை 0772-3
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடிமேல் விட்டார் 0772-4
124. தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி 0773-1
மலை மிசைத் தம்பிரானார் முடி மிசை வணங்கிச் சாத்திச் 0773-2
சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை 0773-3
இலை மிசைப் படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து 0773-4
125. கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு 0774-1
அழலுறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில் 0774-2
பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால 0774-3
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார் 0774-4
126. அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் 0775-1
மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் 0775-2
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு 0775-3
பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான் 0775-4
127. அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும் 0776-1
வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளாச் 0776-2
செவ்விய அன்பு தாங்கித் திருக் கையில் சிலையும் தாங்கி 0776-3
மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார் 0776-4
128. சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும் 0777-1
கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை 0777-2
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே 0777-3
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் 0777-4
129. கழை சொரி தரளக் குன்றில் கதிர் நிலவு ஒருபால் பொங்க 0778-1
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்பத் 0778-2
தழை கதிர்ப் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில் 0778-3
குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும் 0778-4
130. விரவு பன்மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்க 0779-1
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி 0779-2
பொர இரு சுடருக்கு அஞ்சிப் போயின புடைகள் தோறும் 0779-3
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும் எங்கும் 0779-4
131 செந்தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும் 0780-1
மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும் 0780-2
ஐந்தும் ஆறடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் 0780-3
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை 0780-4
132. வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று 0781-1
சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டுக் 0781-2
கருங்கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர் 0781-3
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி 0781-4
13.3 ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும் 0782-1
வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத் தொழில் விரகினாலே 0782-2
ஊறுசெய் காலம் சிந்தித்து உருமிகத் தெரியாப் போதின் 0782-3
மாறடு சிலையும் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார் 0782-4
134. மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி 0783-1
மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை 0783-2
எய்காட்டின் மாவளைக்க இட்ட கரும் திரை எடுத்துக் 0783-3
கை காட்டும் வான் போலக் கதிர் காட்டி எழும் போதில் 0783-4
135. எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக் 0784-1
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார் 0784-2
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு 0784-3
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார் 0784-4
136. வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு 0785-1
சிந்தை நியமத்தோடும் செல் கின்றார் திரு முன்பு 0785-2
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி 0785-3
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் 0785-4
137. மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார் 0786-1
தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து 0786-2
போவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம் 0786-3
ஆவதோ எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார் 0786-4
138. பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான் 0787-1
இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும் 0787-2
செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின் 0787-3
விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் 0787-4
139. பழுது புகுந்தது அது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து 0788-1
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி 0788-2
வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை 0788-3
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார் 0788-4
140. பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் 0789-1
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர்த் திங்கள் 0789-2
அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடை கொண்டு 0789-3
தணிந்த மனத் திருமுனிவர் தபோ வனத்திடை சார்ந்தார் 0789-4
141 இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால் 0790-1
மைவண்ணக் கருங் குஞ்சி வன வேடர் பெருமானார் 0790-2
கைவண்ணச் சிலை வளைத்துக் கான் வேட்டை தனி ஆடிச் 0790-3
செய்வண்ணத் திறம் மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன 0790-4
142. திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல் 0791-1
பெருமலைகள் இடைச் சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து 0791-2
வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கான் இடை நின்று 0791-3
ஒரு வழிச் சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி 0791-4
143. பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடுருவும் 0792-1
அயில் முகவெங் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள் 0792-2
துயில் இடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து 0792-3
வெயில் படு வெங்கதிர் முதிரத் தனி வேட்டை வினை முடித்தார் 0792-4
144. பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் 0793-1
இட்டு அருகு தீக் கடை கோல் இரும் சுரிகை தனை உருவி 0793-2
வெட்டி நறுங் கோல் தேனும் மிக முறித்துத் தேக்கு இலையால் 0793-3
வட்டமுறு பெருங் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் 0793-4
145. இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் 0794-1
வெம் தழலைப் பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள் 0794-2
கொந்தி அயில் அலகம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து 0794-3
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து 0794-4
146. வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின் 0795-1
ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல் இலையில் இட்டு 0795-2
காய நெடும் கோல் கோத்துக் கனலின் கண் உறக்காய்ச்சி 0795-3
தூய திரு அமுது அமைக்கச் சுவை காணல் உறுகின்றார் 0795-4
147. எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் 0796-1
வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்தி 0796-2
அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்குத் 0796-3
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது 0796-4
148. நல்ல பதமுற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி 0797-1
கல்லையினிற் படைத்துத் தேன் பிழிந்து கலந்து கொண்டு 0797-2
வல் விரைந்து திருப் பள்ளித் தாமமும் உந்தூய் மஞ்சனமும் 0797-3
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் 0797-4
149. வந்து திருக் காளத்தி மலை ஏறி வனசரர்கள் 0798-1
தந்தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி 0798-2
அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின் 0798-3
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார் 0798-4
150. ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால் 0799-1
ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில் 0799-2
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன் 0799-3
தேனும் உடன் கலந்து இதுதித்திக்கும் என மொழிந்தார் 0799-4
151. இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம்முடைய 0800-1
ஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார் 0800-2
எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி 0800-3
அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார் 0800-4
152. மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர் 0801-1
தாம் முயலும் பூசனைக்குச் சால மிகத் தளர்வு எய்தித் 0801-2
தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால் 0801-3
ஆமுறையில் அர்ச்சனை செய்து அந் நெறியில் ஒழுவாரால் 0801-4
153. நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின் 0802-1
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு 0802-2
பேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக் 0802-3
காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார் 0802-4
154. முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் 0803-1
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத் 0803-2
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற 0803-3
அன்பு பிழம் பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ? 0803-4
155 அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப 0804-1
மன்னிய ஆகமப் படியால் மாமுனிவர் அருச்சித்து இங்கு 0804-2
என்னுடைய நாயகனே இது செய்தார் தமைக் காணேன் 0804-3
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என 0804-4
156. அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே 0805-1
மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி 0805-2
வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் 0805-3
நன்றவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள் என்று 0805-4
157. அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் 0806-1
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும் 0806-2
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் 0806-3
அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார் 0806-4
158. பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல் அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால் விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்த செருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்.
159. உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும் பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கியினி தொழுகுதலால் ஒருமுனிவன் செவிஉமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப் பொருபுனலின் எனக்கவன்தன் வாயுமிழும் புனல்புனிதம்.
160. இம்மலைவந் தெனையடைந்த கானவன்தன் இயல்பாலே மெய்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால் செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை எம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கொல்வா
161. வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால் நையுமனத் தினிமையினால் நையமிக மென்றிடலால் செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில் எய்யும்வரிச் சிலையவந்தான் இட்டஊன் எனக்கினிய.
162. மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும் இன்பமொழித் தோத்திரங்கள் மந்திரங்களியாவையினும் முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ அன்பில்நினைந் தெனையல்லால் அறிவுறா மொழிநல்ல.
163. உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால் 0807-1
எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய் 0807-2
மனக் கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்து 0807-3
புனல் சடிலத் திரு முடியார் எழுந்து அருளிப் போனார் 0807-4
164. கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடைப் 0808-1
புனை தவத்து மாமுனிவர் புலர் அளவும் கண் துயிலார் 0808-2
மனம் உறும் அற்புதமாகி வரும் பயமும் உடன் ஆகித் 0808-3
துனை புரவித் தனித் தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற 0808-4
165. முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப் 0809-1
பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்து 0809-2
மன்னு திருக் காளத்தி மலை ஏறி முன்பு போல் 0809-3
பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார் 0809-4
166 கருமுகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம் 0810-1
வருமுறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலை 0810-2
அருமறை முனிவனார் வந்தணை வதன் முன்னம் போகித் 0810-3
தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை ஆடி 0810-4
167. மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி 0811-1
ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு 0811-2
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி 0811-3
ஆறுசேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார் 0811-4
168. இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன் 0812-1
மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை முறை தீங்கு செய்ய 0812-2
இத் தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரங் காட்டும் 0812-3
அதனுக்கு என் கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் 0812-4
169. அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்கு 0813-1
திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று 0813-2
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ் 0813-3
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் 0813-4
170. வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர் 0814-1
சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக் 0814-2
கொந்தவர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப் 0814-3
பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார் 0814-4
17.1 விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது 0815-1
ஒழிந்திடக் காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள 0815-2
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா 0815-3
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் 0815-4
172. வாளியுந் தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறா 0816-1
மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ? விலங்கின் சாதி 0816-2
ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ? அறியேன் என்று 0816-3
நீளிருங் குன்றைச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார் 0816-4
173. வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும் 0817-1
நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து 0817-2
நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றி 0817-3
மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார 0817-4
174. பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ? 0818-1
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ ? 0818-2
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ? 0818-3
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் 0818-4
175. என் செய்தால் தீருமோதான்? எம்பிரான் திறத்துத் தீங்கு 0819-1
முன்செய்தார் தம்மைக் காணேன் மொய் கழல் வேடர் என்றும் 0819-2
மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடிப் 0819-3
பொன்செய் தாழ் வரையிற் கொண்டு வருவன் நான் என்று போனார் 0819-4
176. நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும் 0820-1
இனத்திடை பிரிந்த செங்கணேறு என வெருக் கொண்டு எய்திப் 0820-2
புனத்திடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் வைத்த 0820-3
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் 0820-4
177 மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக் 0821-1
கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழியக் கண்டும் 0821-2
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச் செயல் என்று பார்ப்பார் 0821-3
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார் 0821-4
178. இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் 0822-1
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று 0822-2
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண் 0822-3
முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப 0822-4
179. நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார் 0823-1
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி 0823-2
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற 0823-3
ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார் 0823-4
180. வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம் 0824-1
நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில் 0824-2
உலப்பில் செம் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர் 0824-3
குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் 0824-4
181 கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று 0825-1
புண்டரு குருதி நிற்க மற்றைக் கண் குருதி பொங்கி 0825-2
மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும் 0825-3
உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று 0825-4
182. கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு 0826-1
எண்ணுவர் தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி 0826-2
உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு 0826-3
திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர் 0826-4
183. செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட 0827-1
அங்கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர் 0827-2
தங்கண் முன் இடக்குங் கையைத் தடுக்க மூன்று அடுக்கு நாக 0827-3
கங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்ற 0827-4
184. கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும் 0828-1
ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் 0828-2
ஞான மாமுனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள 0828-3
வானவர் வளர் பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப 0828-4
185. பேறினி இதன் மேல் உண்டோ? பிரான் திருக் கண்ணில் வந்த 0829-1
ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்தப்ப உதவும் கையை 0829-2
ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என் வலத்தில் 0829-3
மாறிலாய் நிற்க என்று மன்னு பேர் அருள் புரிந்தார் 0829-4
186. மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர் 0830-1
தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர் தாள் தலைமேற் கொண்டே 0830-2
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம் 0830-3
பொங்கிய புகழின் மிக்கார் திருத் தொண்டு புகலல் உற்றேன் 0830-4
திருஞானசம்பந்தர் தேவாரம் கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள் வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடந் தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே. 3.35.07
வேயனைய தோளுமையோர் பாகமது வாகவிடை யேறிசடைமேற் தூயமதி சூடிசுடு காடில்நட மாடிமலை தன்னைவினவில் வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல ராகுநயனங் காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே. 3.69.04
கண்ணனும் நான்முகன் காண்பரியார் வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங் கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள் அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே. 3.109.7
திருநாவுக்கரசர் தேவாரம் காப்பதோர் வில்லும் அம்புங்
கையதோர் இறைச்சிப் பாரந்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத்
தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்யக்
குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார்
குறுக்கைவீ ரட்ட னாரே 4.49.7
குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந் துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் தூயவாய்க் கலசம் ஆட்ட உவப்பெருங் குருதி சோர ஒருகணை யிடந்தங் கப்பத் தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே. 4.65.8
விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப் பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும் பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார் கழிப்பாலை மேய கபாலப் பனார் வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. 6.12.6
ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய்
காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே 6.39.9
கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய் கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய் படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய் அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய் கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6.81.6
ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார் அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார் தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார் தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார் மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார் காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக் கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே. 6.96.1
சுந்தரர் தேவாரம் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.2
இடந்த கண்ணப்பன் கணைகொள் கண்ணப்பன் நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன் நாளைப்போ வானுங் கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன் பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 7.55.4
திருவாசகம் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச் கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 8.218
திருவிசைப்பா கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன் அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே முடியாமுத் தீவேள்வி முவாயி ரவரொடும் குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே. 9.பூந்துருத்தி.2
பதினோறாம் திருமுறை நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல் நலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி வலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான் குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே. 11.11-நம்பி
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர் கேளார்கொல் அந்தோ கிறிபட்டார் - கீளாடை அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற கண்ணப்ப ராவார் கதை. 11.கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி
கான வேடுவன் கண்பரிந் தப்ப வான நாடு மற்றவற் கருளியும் 11. கோபப் பிரசாதம்
நேசத்தால் வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந்திறைச்சி ஆயசீர் போனகமா அங்கமைத்து - தூயசீர்க் கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி 11.போற்றித் திருக்கலிவெண்பா
நக்கீர தேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
கல்லாட தேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
சென்றுசெருப் புக்காலாற் செல்ல மலர்நீக்கிச் சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன் கண்ணிடந்தன் றப்பும் கருத்தற்குக் காட்டினான் கண்ணிடந்தன் றப்பாமை பார்த்து. 11.பரணர் அருளிய சிவபெருமான் திருவந்தாதி.28
நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல் நலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி வலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான் குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே. 11.திருத்தொண்டர் திருவந்தாதி.12
பெரியபுராணம்
Other stotras
பட்டினத்தார் வாளால் மக அரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன் மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன் தொண்டு செய்ய நாளாறிற் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன் நானினிச் சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தியப்பனுக்கே.
shivAnanda lahari - shankarar